முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்கென 53.5மில்லியன் ரூபாயும், முல்லைத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்காக 80மில்லியன்ரூபாயும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது துறைசார் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குழு அறையில் 25.06.2026இன்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவலகள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் தம்மால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற குழு அறையில் 25.06.2026இன்று வெளிநாட்டு அலுவலகள் மற்றும் சுற்றுலா அமைச்சினுடைய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன்.
குறித்த கூட்டத்தில் சுற்றுலா மேம்பாடு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டபோது முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் பேசியிருந்தேன்.
இந்நிலையில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் விசேட கவனஞ்செலுத்தப்படவேண்டுமென இதன்போது வேண்டுகோளொன்றையும் முன்வைத்திருந்தேன்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மிகவும் பின்தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். குறிப்பாக கடந்தகால யுத்தசூழல் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றோடு கடந்தவருடம் இடம்பெற்ற தித்வா புயல் என்பவற்றாலும் முல்லைத்தீவு மாவட்டம் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கி இருப்பதை இதன்போது அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்ர ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான ஒதுக்கீடுகள் சீராக இருக்கவேண்டுமென இதன்போது வலியுறுத்தியிருந்தேன்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்தெந்த சுற்றுலாத்தலங்களுக்கான மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் இதன்போது அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் வினவியிருந்தேன்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்கென 53.5மில்லியன் ரூபாயும், முல்லைத்தீவு கடற்கரை சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டிற்காக 80மில்லியன்ரூபாயும் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த துறைசார் அதிகாரியால் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் கொக்கிளாய் புளியமுனை சுற்றுலாத் தலத்தின் மேம்பாடு தொடர்பிலும் இதன்போது எடுத்துக்கூறியதுடன், 2027 வரவுசெலவுத்திட்டத்தில் புலிபாய்ந்தகல் மற்றும் முல்லைத்தீவு கடற்கரை ஆகிய சுற்றுலாத்தலங்களின் மேம்பாடுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கும் இதன்போது எனது நன்றிகளையும் தெரிவித்தேன் – என்றார்.










