அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று பௌத்த விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் மிகவும் முதிர்ச்சியற்ற எதிர்க்கட்சிதான் செயல்படுகின்றது என்றும், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருந்த கட்சிகள் தற்போது அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கில் ஒன்றிணைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் திட்டங்கள் வெற்றியடைவதால் அவர்களுக்கு அரசியல் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நடத்திய நிகழ்வுகள் உள்ளிட்டவை திட்டமிட்ட அரசியல் நாடகங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் மக்களின் ஆதரவுடன் அவை முறியடிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.










