வட மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள், அதேபோன்று அதன் சேதாரங்களை சரி செய்வதற்கான செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (19) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் இந்த ஊடக வாயிலாக சில விடயங்களை வெளிக்கொண்டுவர விரும்புகின்றோம்.
குறிப்பாக புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் அல்லது சேதமாக்கப்பட்ட படகுகள், அதேபோன்று காணாமலாக்கப்பட்ட வலைகள் தொடர்பாக நாங்கள் அண்மையிலே கடற்றொழில் அமைச்சர் அவர்களைச் சந்தித்த போது அவரிடம் பல விடயங்களை நாங்கள் முன்வைத்து, சில தீர்வுகள் எட்டக்கூடிய வாறும், அதேபோன்று எதிர்காலத்திலே அமைச்சின் ஊடாகச் செய்யக்கூடிய வேலைத்திட்டங்கள், அதேபோன்று மீனவர்கள் எதிர்கொள்கின்ற பல மீனவப் பிரச்சினைகளும், அதேபோன்று எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்த போது பல்வேறுபட்ட விடயங்களை நாங்கள் பேசியிருந்தோம்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகு, வலைகள் சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தபோது, அண்மையிலே அதற்கான படகுகளும் வலைத்தொகுதிகளும் அந்தந்த மாவட்ட நீரியல் வளத் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மன்னாரில் பதிவு செய்யப்பட்ட 555 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட வலைகள் காணாமல் போன முறைப்பாடுகளும், 8 படகுகள் காணாமலாக்கப்பட்ட விடயங்களும், அதேபோன்று 124 படகுகள் சேதம் என்ற முறைப்பாடும் கிடைக்கப்பெற்றதாக அங்கு சொல்லப்பட்டது.
இதற்கமைய, 93 பேருக்கான வலை தொகுதிகள் தற்போது திணைக்களத்திற்கு கிடைக்க பெற்றிருக்கின்றது. அதேபோன்று இரண்டு படகுகள், மூன்று வள்ளங்கள் உட்பட 5 படகுகள் இப்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
அதேபோன்று, சேதமாக்கப்பட்ட படகுகள் சீர்படுத்துவதற்கு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு விலை மதிப்பீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
வள்ளத்துக்கான சேதம் 30,000 ரூபாய் என்றால், அதைத் திருத்துவதற்காக குறித்த நிறுவனம் 70,000 ரூபாயைக் கேட்கின்றதாகக் கூறப்படுகின்றது.
எனவே, 30,000 ரூபாய் சேதமான ஒரு வள்ளத்துக்கு 70,000 ரூபாய் செலவழித்து செய்யக்கூடிய வகையிலே அந்த வேலை இருக்குமாக இருந்தால், உண்மையிலேயே மீனவர்களுக்கும் பாதிப்பு, இந்த அரசுக்கும் பெரிய பாதிப்பு.
எனவே, அந்த 30,000 ரூபாயை அந்த மீனவர்களுக்குக் கொடுத்தால்கூட அவனே அந்த 30,000இல் அந்த வள்ளத்தைச் சரி செய்யக்கூடியவாறு இருக்கும். எனவே, இந்த 70,000 ரூபாய் தேவையற்ற செலவாக இருக்கிறது. இதனாலேயே இந்த படகுகள் சேதாரம் சீர் செய்யப்படுவது காலதாமதமாகிறது.
இருந்தபோதிலும், 26ஆம் திகதி மன்னாருக்கான அந்தப் படகுகளும், அதேபோன்று வலை தொகுதிகள் 26ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கையை மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் எடுத்திருக்கின்றது.
கிளிநொச்சியிலும் 5 படகுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல் யாழ்ப்பாணத்திலும் அந்த 5 படகுகளும், அதேபோன்று அதற்கான வலைத்தொகுதிகளும் வழங்குவதற்கும் அங்கேயும் ஒரு திகதியை நிர்ணயித்திருக்கின்றார்கள்.
வடமாகாணத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வலைகளும், படகுகளுக்குமான இழப்பீடுகளும், அதேபோன்று அதன் சேதாரங்களை சரி செய்வதற்கான செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடிகள் நீண்டுகொண்டே பட்டியலிடப்பட்டால், அது தொடர்ச்சியாக நிறுத்தக்கூடிய எந்த வகையிலும் இல்லாதவாறு நடைபெற்று வருகின்றது.
எனவே, அமைச்சருடன் நாங்கள் பேசும்போது சுட்டிக்காட்டிய பல விடயங்கள் இந்த வருடத்திற்குள் நாங்கள் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும், அதற்குப் பொருத்தமான தீர்வுகளை அமைச்சர் சொல்லியிருக்கின்றார்.
அதேபோன்று எங்களாலும் பல முன்மொழிவுகள் அங்கு சொல்லப்பட்டன. அதைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
கொள்கை அளவில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு சுமுகத்தை எட்டும் என்று நினைக்கின்றேன்.
அமைச்சர் சொன்ன கருத்தில் உடன்பட்டு அவர் சீர்ப்பாடாக இருந்தால் உண்மையிலேயே இது தீர்வுக்கு வரும். இல்லையேல், கடந்த அரசாங்கங்கள் போல் அல்லது இப்போது இருக்கின்ற அமைச்சரும் கடந்தகால வாக்குறுதி போல் இதையும் கைவிடுவாராக இருந்தால், நிச்சயமாக மீனவர்களுக்கான பாதிப்பு பெரிதாக இருக்கும்.
இந்த அமைச்சருக்கு எதிரான எமது நடவடிக்கையும் தீவிரமாக இருக்கும் என்பதையும் இந்த வேளையிலே தெரிவித்துக்கொள்கின்றேன்.










