மலையகப் புகையிரத மார்க்கத்தில் கண்டி முதல் பதுளை வரையிலான புகையிரத பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் புகையிரத ஊழியர்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மலையக புகையிரத மார்க்கத்தின் பல இடங்களில் மண்சரிவு மற்றும் தண்டவாளங்கள் தாழிறக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியிலான புகையிரதப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
கண்டியின் நுழைவாயில் பகுதியில் உள்ள ‘யக்கா’ இரும்புப் பாலம் முதல் உலப்பனை வரையிலான தண்டவாளத் தாழிறக்கங்கள் சீர்செய்யப்படுகின்றன.
நாவலப்பிட்டி – ஹட்டன் பகுதிகளில் சரிந்து விழுந்த மண் திட்டுகள் அகற்றப்பட்டு வீதிகள் சுத்திகரிக்கப்படுகின்றன.
ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன், உடரதல்ல, நானுஓயா மற்றும் பெரகும்புர வரையிலான பகுதிகளில் சேதமடைந்த பாதைகள் வெகுவாகச் செப்பனிடப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே மலையக மார்க்கத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.














