நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இன்று உலக நாடுகளுக்குப் பாடம் எடுக்க முயற்சிப்பது வேடிக்கையானது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
லண்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
“சர்வதேச நாணய நிதியத்துடன் முறையாகப் பேச்சுகளை நடத்தி, நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம். ஆனால், அந்தப் பலன்களை அனுபவித்துக் கொண்டு ராஜபக்ஷ அணியினர் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு நாட்டுக்குக் களங்கத்தை ஏற்படுத்துவது முறையற்ற செயலாகும்.
ஒரு தலைவருக்குரிய உண்மையான தகுதி என்பது வெறும் மேடைகளில் உரையாற்றுவது மாத்திரமல்ல. மக்கள் மத்தியில் அவர் கொண்டுள்ள நன்மதிப்பும் கௌரவமுமே மிக முக்கியமானது. அந்தப் பல்கலைக்கழகங்கள் நாமல் ராஜபக்ஷவின் உரைகளை இரத்துச் செய்தமையானது, சர்வதேச ரீதியில் அவர்களுக்கு இருக்கும் மதிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.” – என்றார்.










