சிறையில் இருந்து பிணையில் வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஜனாதிபதி அநுர குமாரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மேலும், எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் எனவும், என்னை திடீரென கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும், “இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன்.
அந்தவகையில், எனது மக்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட எனக்கு பல வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.அத்துடன், நாட்டினுடைய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் அதே சமயத்தில், எனது தரப்பு உண்மைகளை எடுத்துரைத்த சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிக பீரிஸ் மற்றும் அவரின் குழுவினருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, நியாயங்களை உணர்ந்து கொண்ட கம்பஹா மாவட்ட நீதிபதிக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










