குறுகிய காலமாக முறுகல் நிலையில் காணப்பட்ட டயகம வெஸ்ட் மூன்றாவது டிவிஷன் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் நேற்று ஹட்டன் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் மூலம் சுமூகமான நிலைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சந்திப்பில் பெல்மோரல் தோட்ட முகாமையாளர் மிகவும் பொறுப்புணர்வுடனும் மனிதநேய அணுகுமுறையுடனும் மக்களின் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.
தொழிலாளர்கள் வேலை இழப்பதன் மூலம் சம்பள வருமானம் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.
அதேவேளை, உதவி முகாமையாளரால் ஏற்பட்டதாக கூறப்படும் இடர்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் தொடர்பாகவும் தோட்ட முகாமையாளர் நேரடியாக பொறுப்பேற்று, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
மேலும், தோட்ட மக்களின் அனைத்து தேவைகளும் தற்காலிகமாக தனது நிர்வாகத்தின் ஊடாக கவனிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
“கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தோட்ட மக்களுடன் சேவையாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. எனவே இவர்களின் வலியும் வேதனையும் நன்கு புரிகிறது.
நீங்கள் உங்கள் தோட்டத்தையும் தொழிலையும் நேசிக்க வேண்டும். தொழிலை உதாசீனப்படுத்தாமல் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். இந்த தோட்டத்தின் எதிர்காலமும், இந்த சமூகத்தின் எதிர்காலமும் உழைப்பின் மூலம் முன்னேறும்” என அவர் உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
மேலும், எந்த தொழிலாக இருந்தாலும் அதனை மரியாதையுடனும் பொறுப்புடனும் மேற்கொண்டு சமூக முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த முக்கிய கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் S. Sachithanandan, தேசிய தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் Logadas, சிரேஷ்ட தொழில் உறவு அதிகாரிகள் Viswanathan மற்றும் Ragnam, மாவட்டத் தலைவர் Nerudasan, முன்னாள் அகரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் Nallu, தோட்டத் தலைவர்கள் மற்றும் பல அரசியல் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












