வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பிரதான வீதியை ஆக்கிரமித்து பாதசாரிகளின் போக்குவரத்திற்கு இடையூறாக நடைபெறுகின்ற வியாபாரங்கள், விளம்பரங்கள் அனைத்தையும் அகற்றுகின்ற பணிகள் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையின் கீழ் இன்று (30) மாலை இடம்பெற்றது.
கிண்ணியா வர்த்தக சங்கம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற குறித்த திடீர் நடவடிக்கையானது கிண்ணியா புஹாரியடி சந்தியில் இருந்து டீ சந்தி வரை இடம்பெற்றது.
இதன் போது வீதியோரங்களில் நடைபாதைக்கு தடையாகவுள்ள வியாபாரப் பொருட்கள் அகற்றப்பட்டதுடன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எதிர் காலத்தில் நடைபாதையை தடை செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை இடம்பெறும் எனவும் வியாபார உரிமையாளர்களுக்கு மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம்.மஹ்திம்,”கிண்ணியா பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரப் பொருட்கள், விளம்பரப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன, இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தரிப்பிடம் செய்ய முடியாதநிலை உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அதன் காரணமாக வர்த்தக உரிமையாளர்களை அழைத்துப் பேசினோம். இதில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி அகற்றும் பணியினை முன்னெடுத்துள்ளோம். இதன் பிறகு வடிகானில் மேல் வியாபாரம் செய்தால் வியாபார அனுமதி இரத்து செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
இது குறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், நகர சபை ஊடான இவ்வாறான நடவடிக்கை வரவேற்கத்தக்கது. வடிகானின் மீது மேசைகளை வைத்து வியாபாரம் செய்வதை உணர்ந்து, தவிர்த்து நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.














