பஹல்காம் தாக்குதல், ஒப்ரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (28) முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன. அதன்படி மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் (29) விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
விவாதத்தின்போது ஏற்பட்ட மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மக்களவை மதியம் 2 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், போரை நிறுத்த உதவியதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கருத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அவர், “நோக்கம் நிறைவேறியதால்தான் ‘ஒப்ரேசன் சிந்தூர்’ நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ட்ரம்ப் கூறியதால் இல்லை.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மட்டுமே இந்திய இராணுவம் துல்லியமாகத் தாக்கியது. 9 பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாகத் தாக்கப்பட்டன. 100 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதே தவிர நிறைவு பெறவில்லை. தேவைப்பட்டால் ஒப்ரேஷன் சிந்தூர் தொடரும்.
பாகிஸ்தான் விமானத் தளங்கள் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி பெரும் சேதமடைந்ததால், மோதலை நிறுத்த பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு தாக்குதலை நிறுத்த கோரிக்கை வைத்தது ” என்றார்.










