• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நினைவேந்தல்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்..!

Mathavi by Mathavi
May 22, 2025
in இலங்கை செய்திகள்.
0
நினைவேந்தல்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்..!
Share on FacebookShare on Twitter

நினைவேந்தல்கள் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் முழு விபரமும் வருமாறு.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஸ்டிக்கப்பட்டிருந்தன. 18ஆம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் வழமை போன்று நினைவேந்தல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் வாரத்தில் ஆங்காங்கே பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. சிறியளவில் அரிசியையிட்டு அதிகளவில் நீரை விட்டு உப்பில்லாமல் உருவாக்கப்பட்டது தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. போரின் இறுதிக் காலங்களில் இதனையே மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவாக அருந்தினர். ஒரு நேரமாவது முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பருகி போரின் இறுதிக் காலத்தில் மக்கள் பட்ட துயரங்களை நினைவு கூருவதற்காக தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் தாயகத்தில் சில இடங்களில் மட்டும் பருகப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி தற்போது தாயகம் மட்டுமல்ல கொழும்பு, புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு என்பவற்றிலும் பருகப்படுகின்றது. இதனை இன்னும் பரவலாக்குவதன் மூலம் போரில் மக்கள் பட்ட துயரங்களை புதிய தலைமுறைக்கு கடத்த முடியும், 1990 களில் பிறந்த தலைமுறை இன்று இளைஞர் பருவத்தை அடைந்துள்ளது. அவர்களிடம் போர் அனுபவங்கள் குறைவு அல்லது இல்லை என்று கூறிவிடலாம்.

அவர்களுக்கெல்லாம் இந்த விடயங்களைக் கடத்துவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பங்களிக்கின்றது.

இந்தத் தடவை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முக்கியப்படுத்தும் நிகழ்வாக இரு நிகழ்வுகள் நடந்துள்ளன எனலாம். ஒன்று கனடா பிரட்மன் நகரில் கடந்த 10 ம் திகதி நகர மேயர் பற்றிக் பிரவுனினால் “தமிழின அழிப்பு நினைவகம்”; திறந்து வைக்கப்பட்டமையாகும். கனடா ஒன்றாரியோ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தின் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவே இந்த நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீலங்கா அரசிற்கு விழுந்த மூன்றாவது அடி இதுவெனலாம்.

முதலாவது அடி கனடா மத்திய நாடாளுமன்றம் இன அழிப்பு தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றியமையாகும்.

இரண்டாவது அடி ஒன்றாரியோ நாடாளுமன்றம் நிறைவேற்றிய தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமாகும். மூன்றாவது அடி பிரட்மன் நகரில் இன அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டமையாகும். தமிழர் தாயக வரைபடத்துடனேயே இந்த நினைவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தில் எல்லாம் ஸ்ரீலங்கா அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இலங்கைக்கான கனேடிய தூதுவரை அழைத்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கனடா அரசாங்கம் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. கனடாவில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. கனடா நீதிமன்றம் அந்த வழக்கினை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த மூன்று நிகழ்வுகளும் சர்வதேச அபிப்பிராயத்தை தமிழ் மக்களுக்கு சார்பாகத் திரட்டுவதில் பாரிய பங்கினை வகித்திருக்கின்றது எனலாம்.

கனடாவில் தமிழ் மக்கள் ஒரு அரசியல் சமூகமாக வளர்ந்திருப்பதனாலேயே இதனை சாத்தியப்படுத்த முனைந்தது எனலாம்.

தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்டது தொடர்பாகவும், இலங்கை வெளிநாட்டமைச்சர் கனேடிய தூதுவரை அமைச்சுக்கு அழைத்து கண்டனத்தை தெரிவித்திருந்தார். தமிழினப் படுகொலை நடந்ததற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
ஆதாரங்கள் இல்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு சம்மதிப்பது தானே! அதற்கு ஏன் பின்நிற்க வேண்டும். தயக்கம் காட்ட வேண்டும். இந்த நினைவகம் திறப்பு அரசாங்கம் எடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகளை பலவீனப்படுத்தும் என வேறு அமைச்சர் கூறியிருக்கின்றார்.

இதுவரை நல்லிணக்கம் தொடர்பாக எடுத்த முயற்சிகளை அமைச்சரால் பட்டியல்படுத்த முடியுமா? அரசியல் கைதிகள் விடுதலை, பறித்த காணிகளை வழங்குதல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் போன்ற விடயங்களில் இன்று நல்லெண்ணத்தையே காட்டவில்லை. இந்நிலையில் நல்லிணக்கத்தை சாத்தியப்படுத்துவர் என எவ்வாறு நம்புவது! தற்போது மீதிக் காணியையும் பறிப்பதற்கு வர்த்தமானி வேறு வந்திருக்கின்றது. பதவியேற்று ஒரு சில மாதங்களிலேயே தாமும் முன்னரைப் போன்ற அரசாங்கம் தான் என்பதை எடுத்துக்காட்ட இந்த அரசாங்கம் தவறவில்லை.

பிரம்டன் நகர மேஜர் பற்றிக் பிறவுண் இந்த எதிர்ப்புக்கள் எமக்கான அங்கீகாரமாகும் எனக் கூறியிருக்கின்றார்.
இரண்டாவது நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினர் இன அழிப்புக் கண்காட்சியை நடாத்துகின்றமையாகும்.

இக்கண்காட்சிகள் முன்னர் பல தடவை ஜெனிவாவில் இடம்பெற்றது. தற்போது தான் முதல் தடவையாக தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. வரலாற்று ரீதியாக இனப்படுகொலை எவ்வாறு இடம் பெற்றது என்பதையும், கண்காட்சி காட்சிப்படுத்துகின்றது.

அரிய புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவூட்டும் சஞ்சிகைகள், பத்திரிகைத் துணுக்குகள், நூல்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் தகவல்களை புதிய தலைமுறைகளுக்கு புரிய வைப்பதில் இக்கண்காட்சி பாரிய பங்களிப்பை வழங்கும் எனலாம்.

இந்தக் கண்காட்சிகளைத் தாயகம் எங்கு நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் தடவை படையினரின் கெடுபிடிகள் பெரிதாக கட்டுரை எழுதும் வரை இடம்பெறவில்லை. ஆனால் புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்புகள் பலமாகவே உள்ளன. தற்போது அரசாங்கம் நிகழ்வுகள் முடிந்த பின் விசாரணை என்ற பெயரில் அலைச்சல்களையும், அழுத்தங்களையும், கொடுப்பதை வழமையாகக் கொண்டுள்ளது. அது இந்தத் தடவையும் நிகழலாம்.

அண்மைக்காலமாக அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது.
நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுவதை அரசாங்கம் நிச்சயம் விரும்பப்போவதில்லை. நினைவேந்தல் உரிமை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உரிமையாக இருப்பதால் இதனைக் குழப்பவும் முடியாமல் சகித்துக் கொண்டிருக்கிறது எனலாம். பல காரணங்களுக்காக அரசாங்கம் இதனை விரும்பப் போவதில்லை. அதில் முதலாவது பெருந் தேசியவாதிகளை திருப்திப்படுத்துவதாகும்.
பெருந் தேசியவாதிகளை திருப்திப்படுத்தாவிட்டால் அரசாங்கத்தினால் ஆட்சியில் நிலைத்திருக்க முடியாது.
குறிப்பாக பௌத்த மத நிறுவனங்களை திருப்திப்படுத்த வேண்டும். யுத்த வெற்றி வாதத்தில் திளைத்திருக்கும் பௌத்த மத நிறுவனங்கள் நினைவேந்தல்களை ஒருபோதும் விரும்பாது.

இரண்டாவது நினைவேந்தல்கள் யுத்த வெற்றி வாதத்தில் கறைகளை ஏற்படுத்தும் என்பதாகும்.

பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் போர் புரிந்தோம். தமிழ் மக்களுக்கு எதிராக நாம் எதுவும் செய்யவில்லை என்ற பிரச்சாரத்தையே அனைத்து அரசாங்கங்களும் மேற்கொண்டு வருகின்றன. அந்தப் பிரச்சாரங்களை நினைவேந்தல்கள் தவிடு பொடியாக்குகின்றன. இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பது நிரூபிக்கப்படும் போது சர்வதேச சமூகத்திற்கும் நிலைமாறு கால நீதியிலிருந்து பரிகார நீதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பரிகார நீதி என்பது சர்வதேச தலையீட்டுடன் கூடிய சுயநிர்ணய உரிமைத் தீர்வுதான். நிலை மாறுகால நீதியினையே வழங்காத அரசு ஒருபோதும் பரிகார நீதியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இனப்படுகொலை என்பது அரசாங்கத்தின் தீர்மானமல்ல. ஸ்ரீலங்கா அரசின் தீர்மானம். இதனால் எந்த அரசாங்கம் வந்தாலும் நினைவேந்தல் நிகழ்வுகளை விரும்பப் போவதில்லை.

மூன்றாவது நினைவேந்தல்கள் தமிழ்த் தேசிய அரசியலை உயிர்ப்பிக்கும் என்ற அச்சமாகும். போர் முடிந்த காலம் தொடக்கம் தமிழ் அரசியலிருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்வதற்காக பல முயற்சிகளை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் செய்து வந்தன. தமிழ்த் தேசிய போராட்டத்தில் ஆயுத வழி போராட்டத்தை அழித்தார்களே தவிர அதன் அரசியலை அழிக்க முடியவில்லை. அரசியல் ரீதியாகவும் அழிப்பதற்காகவே இவ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பக்கத்தில் புலனாய்வு செயற்பாடுகள் மூலம் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுதல் கொடுக்கப்பட்டது. மறுபக்கத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலமும் அரசியல் கட்சிகள் மூலமும் மூளைச் சலவை செய்யப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இதற்காகப் பயன்படுத்தினர்.

சம்பந்தனும், சுமந்திரனும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலை செய்வதில் முனைப்பாக நின்றனர். முதலில் கட்சியை அழிப்பதற்கு முயற்சித்தனர். தொடர்ந்து மக்களை மாற்ற முயற்சித்தனர். இந்த முயற்சிகள் தான் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கும், தமிழரசு கட்சியின் சிதைவுக்கும், காரணமாகியது. ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது பேரினவாத செயற்பாடுகளை கைவிடாத நிலையும், மாற்று அரசியல் தரப்பினரின் விழிப்பான செயல்பாடுகளும் இவர்களின் முயற்சிகளை தோல்வியடையச் செய்தன.

இன்று தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் கூட தமிழ்த் தேசிய நீக்க அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் இடையிலான போராட்டத்தின் விளைவு தான்.

சுமந்திரன் இன்று தமிழ் மக்களின் விழிப்புக்கு முகம் கொடுக்க முடியாமல் தமிழ்த் தேசியவாதி போல தன்னைக் காட்டிக்கொள்ள முற்படுகின்றார். இது வெறும் நடிப்பேயொழிய உண்மையல்ல. தற்போது நினைவேந்தல்கள் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

நான்காவது யுத்த வெற்றிக்கு காரணமான படையினரை திருப்திப்படுத்துவதாகும். ஆட்சிக்கு வருகின்ற எந்த அரசாங்கங்களும் படையினரை திருப்திப்படுத்த பின் நிற்பதில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று யுத்த வெற்றிக்கு காரணமாக படையினர் இருந்தனர் என்பதாகும். இரண்டாவது அரசாங்கங்களின் இருப்பு படையினரிலேயே தங்கியிருந்தது. கோத்தபாயவின் வீழ்ச்சிக்கு பிறகு இது மேலும் உறுதியானது. படையினர் கைவிட்டமையினாலேயே கோத்தபாய வீழ்ச்சியடைந்தார். இந்த நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அநுர அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது. தவிர படையினர் இன்று ஒரு அரசியல் சக்தியாகவும் உள்ளனர். படையினரை மீறி எந்தத் தீர்மானத்தையும் எடுக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புகளை கூட மீறும் துணிவு படையினருக்கு உண்டு. குருந்தூர் மலை விவகாரம் இதற்கு நல்ல உதாரணம். இறுதியில் நீதிபதியே நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. பொறுப்புக் கூறல் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறையை அரசாங்கம் ஒரு போதும் மேற்கொள்ளப் போவதில்லை.

ஐந்தாவது இன அழிப்புத் தொடர்பான சர்வதேச அபிப்பிராயம் உருவாகும் என்ற அச்சமாகும். இன்று உலகு தழுவிய வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது வலுவான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கப் பார்க்கும். தேசிய இனப் பிரச்சினை என்பது ஒரு உள்நாட்டுப் பிரச்சினையல்ல. சர்வதேசப் பிரச்சினையாகும். உள்நாட்டுத் தீர்வு அதற்கு கிடையாது. சர்வதேசத் தீர்வுதான் அதற்கு உண்டு. சர்வதேசத் தலையீட்டின் மூலம் தான் பல தேசிய இனங்கள் விடுதலையைப் பெற்றுக் கொண்டன. கிழக்குத் தீமோர், கொசேவா, தென் சூடான் என்பன இதற்கு சிறப்பான உதாரணங்கள். இலங்கைத் தீவிலும் அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மிகக் கவனமாக உள்ளன. அரைகுறைத் தீர்வாக உள்ள 13 வது திருத்தம் கூட பிராந்திய அரசியல் தலையீட்டினால் கிடைத்த ஒன்றாகும்.

நினைவேந்தலை அனுஸ்டிப்பது என்பதும் கூட்டுத் துக்கத்தை கூட்டாக அனுஸ்டிப்பது என்பதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். கூட்டுத் துக்கத்தை கூட்டாக அனுஸ்டிப்பது தமிழ் மக்களின் மரவிலும் உள்ளது. நடுகல் வழிபாட்டை தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் தாராளமாக அடையாளம் காணலாம். படுகொலை நடந்த இடத்திலும், இறுதி மரண நிகழ்வு நடந்த இடத்திலும், நினைவேந்தலை அனுஸ்டிப்பதும் மரபாக உள்ளது. தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள ஆற்றுப்படுத்தல்களையும் நினைவேந்தல்கள் வழங்குகின்றன.

நினைவேந்தலிற்கு முக்கியத்துவமும் பல உண்டு. தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதற்கு நினைவேந்தல்கள் துணை புரிகின்றன. தேசமாகத் திரள்வதற்கு வரலாற்றைக் கடத்துதல் இன்றியமையாததாகும். நினைவேந்தல்கள் ஒடுக்குமுறை அரசை அம்பலப்படுத்தவும் உதவுகின்றது.

இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிப்பதற்கு இது உதவியாக அமையும். தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதற்கும் இது வழிகோலும். இன அழிப்பை எதிர்காலத்தில் தடுக்க வேண்டுமாயின் அரசியல் இலக்கில் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பது மிக மிக அவசியம்.

நினைவேந்தல் மக்களிடம் பரவலானமை போதுமானது எனக் கூறி விட முடியாது. ஆங்காங்கே செயற்பாட்டாளர்கள் தான் இதில் அக்கறையாக உள்ளனர். பரந்துபட்ட மக்கள் இதில் அக்கறைப்பட்டு பங்களிக்கின்றனர் எனக் கூறிவிட முடியாது. இறுதி நிகழ்வில் திரளாகப் பங்களிக்கின்றனர் என்பது உண்மைதான். இது போதுமானதல்ல. நினைவேந்தல் வாரத்திலும் மக்களின் பங்களிப்பைக் கூட்ட வேண்டும். கிராமங்களில் மக்கள் தாங்களாக முன்வந்து கறுப்புக் கொடி கட்டுதல், வாழை தோரணங்களை கட்டுதல், முள்ளிவாய்க்கால் கஞ்சியை உருவாக்கி மக்களுக்கு வழங்குதல் என்பவற்றிலும் ஈடுபட வேண்டும்.

கிராமங்களிலுள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன இவற்றிற்கு தலைமை கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். நினைவேந்தல்களை கிராமங்களுக்கு கொண்டு செல்லாமல் அதனை மக்கள் மயப்படுத்த முடியாது.

முன்னர் ஒரு தடவை தமிழ் சிவில் சமூகம் நான்கு வேண்டுகோள்களை மக்களிடம் விடுத்திருந்தது. பிள்ளைகள் இளம்பராயத்தவர்களோடு சில மணி நேரம் செலவிட்டு ஏன் இந்தப் படுகொலை நிகழ்ந்தது என்பது பற்றி உரையாடுங்கள். மின்சார விளக்குகளை அணைத்து எண்ணெய் தீபமேற்றி மாலை 6 மணிக்கு சிறிது நேரம் எரிய விடுங்கள். ஒரு வேளையாவது சாதாரண கஞ்சியை ஏன் குடிக்க வேண்டும்? என்பதை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துங்கள். உயிர் நீத்தவர்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்பதே அந்த வேண்டுகோள்களாகும். இந்த வேண்டுகோள்கள் இன்றைக்கும் பொருத்தமானவை.

Related Posts

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 30, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

by selvan
May 30, 2026
0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

by Mathavi
May 30, 2026
0

2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது அங்கு ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையின்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 30, 2026
0

நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில், ரூபின்ஸ் வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக...

சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!

சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!

by Mathavi
May 30, 2026
0

"சத்திர சிகிச்சைக்காக உதவி கோரும் முன்னாள் போராளிகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும், தயவுசெய்து அவர்களைக் கொச்சைப்படுத்தி உபத்திரம் செய்யாதீர்கள்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...

தமிழ் இனப் படுகொ*லை எங்கும் இடம்பெறவில்லை.!

தமிழ் இனப் படுகொ*லை எங்கும் இடம்பெறவில்லை.!

by Mathavi
May 30, 2026
0

"இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என்பதில் சர்வஜன அதிகாரம் கட்சி மிக உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது. அண்மைக்காலமாக வடக்கில் இவ்வாறான கருத்துகள்...

புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!

புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!

by Mathavi
May 30, 2026
0

"தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருட காலத்தைக் கடந்து செல்வதற்காக அல்ல. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்கும் வலுவாக முகம் கொடுத்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி