கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று முன்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தெரிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களும், உப தவிசாளராக புஸ்பநாதன் சிவகுமார் அவர்களும், பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் அவர்களும் உப தவிசாளராக திருமதி. குணலக்சுமி குலவீரசிங்கம் அவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் அவர்களும், உப தவிசாளராக சிவகுரு செல்வராசா அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தெரிவுகள் தொடர்பிலான மாவட்டக்கிளையின் எழுத்துமூல தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்களால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.