தீபச்செல்வன் என்ற புனைப்பெயர் கொண்ட அண்ணன் பிரதீபன் ஈழ தேசத்தில் தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத எழுத்தாளராவார். ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த அண்ணன் தீபச்செல்வனின் எழுத்துக்கள் தூங்கும் தமிழர் மனங்களை தட்டி எழுப்பி சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது.
எழுத்துக்களை ஆயுதமாக்கும் அண்ணனின் சிந்தனை ஓட்டம் விடுதலை போராட்ட காலத்திலிருந்து தொடர்கிறது. தமிழரின் விடுதலையை ஆழமாக சுவாசிக்கும் போக்கிலேயே அண்ணனின் கவிதைகள் பறை சாற்றுகிறது. உலகின் இனப் பரம்பலில் ஏற்படும் விடுதலை போராட்ட பெரும் மூச்சுக்கள் பலவற்றின் எடுத்துகாட்டுக்களையும் ஆதாரங்களையும் முன்னிலைப்படுத்தி ஈழத்தின் ஏக்கத்தினை தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளர் தீபச்செல்வன்.
ஈழதேச விடுதலைக்கான போராட்டத்தின் அத்தனை வலிகளையும் கனவுகளையும் உயிர்த்தியாகங்களையும் மூன்றே வரிகளில் வரைந்து எம்மை வாயடைக்க வைத்துள்ளார் அண்ணன் தீபச்செல்வன்.
ஈமத்தாழி என்ற தலைப்பில் அமைந்த கவிதைகளுள் என்னை அதிகமாக புரட்டி போட்ட வரிகள் பின்வருமாறு,
“சிதைக்கப்பட்ட கல்லறையை சுற்றித் திரியும்
தாயொருத்தி சிந்தும் ஒரு துளி கண்ணீர்
இரண்டாய் பிரித்து விடுமா இத் தீவை “
காஸா நகர் குழந்தைகள் எனும் தலைப்பில்
“அவர்கள் ஏன் குழந்தைகள் மீது
குண்டுகளை வீசுகிறார்கள்?
தமது துப்பாக்கிகளை
ஏன் குழந்தைகளுக்கு எதிராய்
திருப்புகிறார்கள்?
ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும்
ஒரு குழந்தையின் பிணம்
குழந்தைகளற்ற
குழந்தைகள் பதுங்கியிருக்கும்
ஓர் நகரை எப்படி அழைப்பது?
ஓர் ஈழக் குழந்தையை
கருவில் கரைத்துக் கொல்லும்போது
பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை
குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன
குழந்தையைக் கொல்பவர்களின் நோக்கம்
என்னவாய் இருக்கும்?”
உனக்காக கொந்தளிப்பேன் எனும் தலைப்பில்
“என் கோவில்களையும்
உன் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்?
கடவுள்களையும் கொலை செய்யும் நிலத்திலிருந்து
உனக்காய் பிரார்த்திக்கும் நானறிவேன்
கைவிடப்படுதலின் துயரத்தை
என்னிடம் தொப்பி இல்லை
நீயோ திருநீறு அணிந்திருக்கவில்லை
ஆனாலும் நமது இரத்தம் உறிஞ்சப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
உறிஞ்சப்படும் குருதி வேறு வேறல்ல “
பயங்கரவாதி எனும் தலைப்பில்
“பனை மரங்களைப் பிடுங்கி
கித்துல் மரங்களை விதைப்பாய்
என் பூர்வீக வீடுகளைச் சிதைத்து
இராணுவ முகாம்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்
ஆலமரங்களை வீழ்த்தி
வெள்ளரச மரங்களை நடுவாய்
என் ஆதிச்சிவனை விரட்டி
புத்தரைக் குடியேற்றி
எனை பயங்கரவாதி
என்பாய்
எனது நிலங்களை அபகரித்து
உனது பெயர்களைச் சூட்டுவாய்
எல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு
எனது தேச வரைபடத்தை
வரையுமென் கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்
ஆம், சிங்கள தோழனே!
குழந்தைகளின் நிலத்தைக் காப்பவன்
பயங்கரவாதி எனில்
குழந்தைகளின் பூக்களைச் சேமிப்பவன்
பயங்கரவாதி எனில்
நான் பயங்கரவாதிதான்
இது பயங்கரவாதிகளின் பூமிதான்.”
எழுத்துக்களால் விடுதலையை விடிய வைக்க துடிக்கும் அண்ணனின் எழுத்தின் மீதான காதலும் இனத்தின் மீதான பற்றும் விடுதலை வேட்க்கையும் ஒரு போதும் ஓயப் போவதுமில்லை,ஓயவும் கூடாது. எழுத்துக்களால் தமிழினத்தை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தும் மற்றும் ஒரு விடுதலைக்கான இளைஞரின் போராட்ட வரலாற்றினை தத்துரூபமாக எடுத்துரைக்கும் ஆற்றலும் அண்ணன் நூல்களில் காணலாம். சிங்கள மக்கள் வரை தனது இனத்தின் நூற்றாண்டுகால வலியினை எழுத்துக்கள் மூலம் மொழிபெயர்ப்பு செய்து உணரச் செய்கிற தீபச்செல்வன் அண்ணனின் எண்ணங்கள் தொடர்ந்து பரந்து பாய வேண்டும்.
நூல் :-நான் ஸ்ரீலங்கன் இல்லை
நூல் ஆசிரியர் :-தீபச்செல்வன் (பிரதீபன் )
விலை :-900 ரூபாய்
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

