சிறுவயதிலிருந்து தாயின் அன்பினையும் அரவணைப்பினையும் அள்ளிப் பருகிய ஆண் பிள்ளைகளில் அரியநாயகமும் ஒருவராவார். தமிழின் தொன்மை நூல்களினை ஆங்காங்கே கிடைக்கின்ற நேரத்தில் படித்து கதையாக, பாடலாக தாய் வெளிப்படுத்துவதை தன்னுள் சிறுவயது முதல் ஈர்த்த கவிஞர் பிற்ப்பட்டகாலத்தில் கவிதைகளை வடிவமைத்தார்.
தனது பதினைந்து வயது முதல் கவிதை எழுதத் தொடங்கிய சிறுவன் அரியநாயகம். சிறுவயதுக் கவிதைகள் அவ்வப்போது பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டு வெளிவந்ததும் உள்ளது. சிறுவயதில் தொடங்கிய கவி ஆர்வம் இன்றும் கவிமழை பொழியச் செய்கிறது. அன்பு, மங்கை, தாய்மை, காதல், இயற்கை போன்ற பல விடயங்களை கவிதைகளில் பட்டை தீட்டுகிறார்.
இறைவணக்கம்
“பல்பெரும் சமயம் கூறும்
பரம் பொருள் ஆகி நின்று
நல் இறை சக்தியாக
நலம் தரும் இறைவனாக
கல் மனம் கொண்ட மாந்தர்
தம் மனம் கனிந்திடவும்
சொல்வளம் கொண்ட தூய
இறைவனே தொடர்ந்து வந்து
வல்ல நின் வார்த்தையாலே
வளம் பெறு கவிதையாக்கி
அல்லவை அகற்றி நல்ல
அமுதமாம் கருத்தை வைத்தென்
இல்லத்தில் உறைந்து எந்தன்
இதயத்தில் நிறைந்து நின்று
வெல்லத்தில் கலந்த தேன் போல்
வளம் மிகு சொற்கள் சேர்ப்பாய்”
நற்றமிழ் பூங்கா எனும் தலைப்பில்
“அன்பு என்னும் நறுமணம் வீசி
ஆற்றல் என்னும் கொடிதனில் படர்ந்து
இன்பம் என்னும் பொய்கையில் நம்மை
ஈர்க்கும் தன்மை கொண்ட மலர்கள்
உம்பர் உலக வானவர் தானும்
ஊக்கம் கொள்ளும் ஆக்கமுடைய
எங்கும் மலரும் எழில்மிகு செடிகள்
ஏற்றங்கொள்ள இங்கே அளிக்கும்
ஐயம் தீரும் ஆழ்ந்த கருத்து
ஒருங்கே படைக்கும் ஒரே நற் பூங்கா
ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த
ஓளவை தந்த அரிய கருத்தில்
அதே மனதில் ஆழமாய்க் கொண்டு
ஆக்கித் தந்தேன் நற்றமிழ் பூங்கா “
விதி வென்றது எனும் தலைப்பில்
“அன்றில் பறவைகள் ஒன்றாய் இருந்தன
அகமதில் மகிழ்ந்தன இணைந்தன நன்றாய்
இன்று நல்வேட்டை என்றவோர் வேடனும்
இணைத்தனன் அம்பினை அன்றிலுக் கெய்யவே
நன்றென நினைத்த நல் நாகமதொன்று
நாணேற்றும் வேடனின் கால்களை நாடிற்று
என்னென்று பார்க்கக் காலை இழுத்தனன்
இலக்குத் தவறி எயிறது சென்று
அன்றில் மேல் கண்ணாய் இருந்த பருந்தை
அடித்து கொன்றது அன்றில்கள் தப்பின
துன்புற நினைத்த வேடனும் துவண்டான்
துணையுடன் அன்றில் தூரச் சென்றது “
காதல் எனும் தலைப்பில்
“அழகிய மங்கை அருகினில் வந்தாள்
பழகிய உடனே பருவத்தால் கவர்ந்தாள்
குழலது கருமை குரலது இனிமை
மொழியது என்னைக் கவர்கின்ற தன்மை
இனிதென நினைத்து இதழது நெருங்க
மனையாளின் எண்ணம் மனதினில் தோன்ற
கனிந்திட்ட காதல் அகன்ற தக்கன்னிக்
கனியும் அழுகிய பழமாய் காண்பாள்
வெறுத்தது உள்ளம் வெந்தது உடலம்
கறுத்தது முகமும் கலுழ்ந்தன கண்கள்
மறுத்தது இனிமேல் மங்கையர் தன்னை
பொறுத்திருப்பேன் ஓர் பொன் நாள் அணுகவே
அந்தநாள் வந்தது அழகிய மனையாள்
புன்னகை புரிந்தாள் போகமும் செய்தாள்
இந்நாள் வரைக்கும் எனக்கோர் வெறுப்பு
அந்நாள் போன்று இவள் மேல் ஆகலை
இல்லாள் தந்த இனிய நாள் போன்று
அல்லாள் தருவது இனிமேல் ஆகா
பொல்லா வினைகள் புகாத வண்ணம்
நல்லா ளேன் னில்லாள் நலனுட னளித்தாள் “
தாய்மையின் பண்பு எனும் தலைப்பில்
“கொடியிடைத் தாயொரு குழந்தையை ஈன்றாள்
மடியிடை யேந்தியம் மழலையைத் தழுவாள்
கொழுநன் ஓர்நாள் குவலயம் நீத்தான்
அழுதாள் நங்கை அரற்றினள் ஆனால்
அவனோ அங்கே அணுகிலன் எனவே
இவளும் அவனை இணையவே எண்ணி
வளையதில் கயிற்றை வரிந்து கட்டினாள்
இளை யொன்றை தனது கரத்தால் இறுக்கினாள்
இணை யற்றசேயை இறுதி நன்னேரம்
துணை யற்றிருக்க விடுதலோ எனத்
திரும்பிப் பார்த்தாள் குழந்தை சிரித்தது
அரும்பிய சிரிப்பில் இளைதனை அறுத்தாள்
கருப்பன்ன சேயைக் கனிவுடன் எடுத்தாள்
துரும்பென நினைத்தாள் சுகதுக்கம் யாவும்
கருவினில் உதித்த நற்சேயைக் காக்கவே
விரும்பினாள் புவியை வாழ்வுடன் இணைந்தாள்”
இறைவணக்கத்திலிருந்தே அசைக்க முடியாத அடித்தளத்தை போட்டு கவிதை எனும் கட்டிடத்தை கட்டத் தொடங்குகிறார். இறைவணக்கம் சொல்லி எழுதிய கவிதை என்னை முதல் தாள் முதல் வாசிப்பிலேயே நூலுக்குள் இழுத்துப்போய் விட்டது. கவிஞருடைய கவிப் பூக்கள் ஒரு போதும் வாடாது, தொடர்ந்து பூத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனை நாங்கள் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நூலின் பெயர் :- உணர்வுகளின் சங்கமம்
நூலாசிரியர் :- இளையதம்பி அரியநாயகம்
விலை :-400
நன்றி
எழுத்தாளர்,
விமர்சகர்
ஆதன் குணா

