மீட்டியாகொடை – தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்டியாகொடை மற்றும் கஹவ பகுதிகளைச் சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் 5 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் தம்பஹிட்டிய பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் இரண்டு உந்துருளிகளில் பயணித்த குழுவொன்றினால் கடந்த 3 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .