இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் யாழ் மாநகர சபையின் உறுப்பினராகக் கூட வர முடியாது என அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளம் மூலம் சுமந்திரன் கருத்து தெரிவித்தாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை “யாழ் மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் வேட்புமனுவில் போலியான வதிட முகவரியை வழங்கியமை தொடர்பில் நாங்கள் செய்ய வேண்டிய முறைப்பாட்டை சொந்த கட்சியினரே செய்துள்ளனர். இது நல்லவிடயம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்” என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

