ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென் நகடானி மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று (4) அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இருதரப்புக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு என்பன தொடர்பில் ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்து – பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று ஜப்பானியப் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்கை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்தும் பிரதமர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா உட்பட ஜப்பான் மற்றும் இலங்கையின் முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.