சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுஷ்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகின்றது.
அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
குறிப்பாக நாளை ஞாயிறு தினம் அனைத்து அறநெறிப் பாடசாலைகளிலும் சமய நிறுவனங்களிலும் சுவாமிகளின் நினைவுப் பிரார்த்தனைகளை உணர்வுபூர்வமாக அனுட்டிக்குமாறு வேண்டுகின்றோம்.
ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் அடையாளமாக உலகளாவிய ரீதியிலும் நாடாளாவிய ரீதியிலும் அனைத்து நிகழ்வுகளையும் பிரதிநிதிப்படுத்திய உயரிய குருமுதல்வருக்கு நாம் செய்யும் கைம்மாறாக அது இருக்கும்.
இளமைக்கால வாழ்வை சைவ சமய மேன்மைக்காக துறந்து யுத்த கால நெருக்கடிகளை எல்லாம் தன்னந்தனியாக கடந்து சைவர்களின் அடையாளத்தை பேணிய மகத்தான ஆத்மா அவர்.
எளிமையான எவரும் அணுகக்கூடிய சமயத்தைலைவரான ஆதீனம் மிக எளிமையாகவே தன் விருப்பப்படி இறுதி வணக்க நிகழ்வையும் கண்டார்.
அந்த மகத்தான குருமுதல்வருக்கு உயரிய கௌரவத்தையும் வணக்க வழிபாடுகளையும் செய்வது மட்டுமன்றி சுவாமிகள் கட்டிக்காத்த உயரிய ஆதீன பாரம்பரியத்தினை சைவ சமய பீடங்கள் அமைப்புக்களின் தலைவர்கள் கூடி அவர் விட்டுச் சென்ற பணியை தொடர குருமகா சந்நிதானம் ஒருவரை உடனடியாக தெர்ந்தெடுத்து அருளாட்சி பொறுப்பை ஒப்படைத்தல் சைவசமயிகள் யாவர் முன்னும் தற்போது உள்ள கடமை ஆகும் – என்றுள்ளது.