முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்றையதினம் (29) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது.
மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட அபிவிருத்தி குழுச் செயலாளருமாகிய திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பொருளாதார சமூக அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் முதன்மையாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் கல்வி, சுகாதாரம், காணி, போதைப்பொருள் ஒழிப்பு, மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம் தொடர்பான காணி விடயங்கள், முல்லைத்தீவிற்கான சொகுசு பஸ், விவசாயம், நன்னீர் மீன்பிடி, கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள், உத்தியோகத்தர்களின் இடமாற்றம், ஆசிரியர்களின் இடமாற்றம், மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி, சட்டவிரோத மண் மற்றும் கிரவல் அகழ்வு என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முக்கிய சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ. திலகநாதன், கெளரவ.காதர் மஸ்தான், கெளரவ. இஸ்மைல் முத்து முஹமட், கெளரவ.து.ரவிகரன், வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர் திரு .எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




