தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா, சூடுவெந்தபுலவு கிராமத்தில் நேற்று (01.05) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”கடந்த இரு தசாப்தங்களாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இந்தப் பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றிக் கடன் தெரிவிக்கும் தேர்தலாக இந்த தேர்தலைப் பார்ப்பார்கள். தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிகளவிலான வாக்குகளை வழங்கினார்கள். அதேபோல் கடந்த நாடாளுமனறத் தேர்தலில் வடக்கு – கிழக்கு பகுதி மக்களும், தென்பகுதி மக்களும் அதிக வாக்குகளை வழங்கினார்கள்.
ஆனால், கடந்த 6 மாத காலப்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் சொன்னதிற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் பெரிய பின்னடைவை அவர்கள் அடைவார்கள்.
எமது கட்சி நாடாளுமன்ற தேர்தலை விட இம்முறை அதிக வாக்குகளைப் பெறுவோம். கடந்த முறை வன்னியில் நான்கு சபைகளை கைபற்றி ஆட்சி அமைத்தோம். இம்முறை அதிக சபைகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.



