சமூக மாட்சியை நிலைகுலையச் செய்யும் நெருக்குவாரங்களின் மேல் நின்று, வடக்கு கிழக்கின் உள்ளூர் அதிகார சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் துடிப்பு, தமிழினத்தை அரசியல் ரீதியில் அடிமைகொள்வதற்கான மற்றுமொரு இனவாத முயற்சியே அன்றி வேறில்லை. அத்தகைய அரசியல் சதிகளை முறியடிப்பதற்கு, தமிழ்த் தேசியத்தின் வெற்றியை உறுதிசெய்வதே தமிழர்களின் காலக்கடமை.
எங்கள் ஊரின் வழக்கங்களையும், வழக்காறுகளையும் பேணியவாறு, எமக்கேயுரித்தான பண்பாட்டு வாழ்வியல் முறைகளோடு இணைந்து எமது சமூகத்தை கட்டியெழுப்புகின்றபோது மாத்திரமே தளம்பலற்ற நிலைபேறான அபிவிருத்தி எய்தப்படும். வெறும் பண முதலீடுகளாகவும், ஆசை வார்த்தைகள் ஊடான அபிவிருத்தி எண்ணங்களாகவும், தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்களை இழிவுபடுத்துவதன் மூலமாகவும் வேற்று இன அபிமானத்தை உருவாக்குகின்ற வஞ்சனை மிகுந்த சூழலைத் தோற்றுவிப்பது, ஒரு தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பிற்கு ஆபத்தானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், பிரச்சாரக் கூட்டமும் நேற்றைய தினம் பிரமந்தனாறு வட்டாரத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் பிரதேச அமைப்பாளர் ஞானபண்டிதர் ஞானகுமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும் வேட்பாளருமான அருணாசலம் வேழமாலிகிதன், பிரமந்தனாறு வட்டார வேட்பாளர்களான புஸ்பநாதன் சிவகுமார், ருசோஜினி சந்திரகாந்தன், உதயநகர் வட்டார வேட்பாளர் குணபாலசிங்கம் குணராஜ் ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன், கட்சியின் வேட்பாளர்கள் உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







