இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும், திருட்டு அரசியல் இல்லாமல் போகும், தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர். நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(29) இரவு வேட்பாளர் எம்.எச்.எம்.பாஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அமைச்சிற்கு கீழ் சமாதான சகவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. நான் தெற்கைச் சேர்ந்தவன். தெற்கில் பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து அரசியல் செய்து வருகின்றேன். அங்குள்ள எமக்கு கிடைக்கும் செய்தி வடக்கில் இருக்கின்ற மக்கள் ஒற்றுமை இன்றி இருப்பதாக கிடைக்கிறது.
ஆனால் மன்னாரிற்கு வந்து நேரடியாக பார்க்கின்ற போது அவ்வாறு எதுவும் இல்லை. இங்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக மிகவும் அன்பாகவும் வாழும் காட்சியை பார்க்கிறேன். எமது நாட்டில் சமாதானம் இல்லாமல் போவதற்கு காரணம் என்பது குறித்து ஜேர்மன் நாட்டில் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நாட்டிலே தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்விடயம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் முடிவில் கூறப்பட்ட விடயம் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலான பிரச்சினை ஏற்படுவதற்கான முதல் தர காரணி அரசியல் வாதிகள் என்று. இரண்டாவது காரணம் மொழி.
அமைச்சை நான் பாரம் எடுத்த போது உணர்ந்த விடயம் தான் வடக்கிலே வாழக்கூடிய மக்கள் அதிகம் தமிழ் மொழியில் பேசக் கூடியவர்கள் என்று. அவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் வருகின்ற போது பொலிஸ் நிலையங்களுக்கு செல்லுகின்ற போது அங்குள்ள பொலிஸார் பலருக்கு தமிழ் மொழி தெரியாது. அங்கும் சில பிரச்சினைகள் ஏற்படும்.
வைத்தியசாலைகளிலும் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சோர்வடைகின்றார்கள், வேதனை அடைகின்றார்கள்.
தனது சொந்த மொழியில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளமை குறித்து அவர்கள் வேதனை அடைகின்றனர்.
எமது அமைச்சின் கீழ் உள்ள தேசிய மொழிகள் ஆணைக்குழு வடக்கையும் கிழக்கையும் மொழி ரீதியாக இணைத்து சமாதான சகவாழ்வு சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக எல்லா சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல அமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.
இன்னும் ஒரு சில தினங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம் பெற உள்ளது. நான் மன்னாருக்கு வந்த போது தாராபுரம் கிராமத்திற்குப் போனேன். நான் தற்போதைய ஒரு பிரதி அமைச்சர். நான் எனது வாகனத்தில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வி.ஐ.பி லைட்டை பயன்படுத்தவில்லை. ஆனால் நான் தாராபுரத்தில் நின்ற சமயத்தில் அரசியல் நோயால் மன நோயால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தான் தொடர்ந்து இந்த ஏரியாவின் ஜாம்பவான்.
நான் தான் இந்த ஏரியாவின் அரசியல் வாதிகள் என்று காட்டுவதற்காக வி.ஐ.பி.லைட்டை பயன்படுத்துகின்றனர். வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தாராபுரம் போனால் அடிப்பார்கள் என்று கூறினார்கள்.
நான் தாராபுரம் போனது எவ்வித கலந்துரையாடலுக்கும் இல்லை. முடிந்தால் முன்னாள் அமைச்சர் எங்கள் அரசாங்கத்தில் உள்ள யாரையாவது அடித்து பார்க்கட்டும் என்று. தற்போது அவர் பெட்டிப்பாம்பாக அடங்கியுள்ளார்.
இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும். திருட்டு அரசியல் இல்லாமல் போகும். தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர்.
நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மக்கள் சொத்துக்களை திருடியவர்கள், மக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியவர்கள், மக்களை அச்சுறுத்தியவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக அதற்கான தண்டனையை வழங்குவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

