தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் 29.04.2025 இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
அவர் உரையாற்றுகையில் “இலங்கை சுதந்திரத்திற்கு முன்னமே 1930 ஆண்டவிலே மக்களின் நலனுக்காகவே பிரதேச சபைகள் கொண்டுவரப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சுகாதார வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கவும், அத்துடன் இயற்கை வளங்களையும், மனித வலுவையும் உரிய முறையில் பாதுகாப்பது அந்தந்த பிரதேச சபைகளின் கடமை ஆகும்
இவ்வளவு காலமும் இயங்கி வந்த உள்ளூராட்சி சபைகளின் முறைமை முற்றிலும் பிழையானது. ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் கீழ் வாழ்கின்ற மக்களுக்காக அந்தந்த பிரதேச சபைகளின் கீழ் உள்ள வளங்களையும், மக்களின் தேவைப்பாடுகளையும் கண்டறிந்து மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நிறுவனமே பிரதேச சபையாகும்.
தற்பொழுது இருக்கின்ற பிரதேச சபைகள் எங்களுக்கான தேவைகளை முழுமையாக செய்திருக்கின்றனவா? நெடுஞ்சாலைகள் மத்திய அரசாங்கத்திற்கு உரியது. உள் வீதிகள் அனைத்துமே பிரதேச சபைகளுக்கு உரித்தானது. அதுமட்டுமின்றி பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் சிறுவர் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய வகையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம் ஆகும். தெருவிளக்குகளை மக்களுக்கு தேவை ஏற்படக்கூடிய வகையில் தேவை ஏற்படும் இடத்தில் பொருத்தப்படுமாயின் அனைவருக்குமே பாதுகாப்பாக அமையும்
அத்துடன் நீர் வடிகால் அமைப்பு சுத்தமாகவும், சுகாதாரத் தன்மையுடனும் காணப்படுவதில்லை. மக்களுக்கு ஏற்ற வகையில் நுளம்புகள் பெருகாத வகையில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பது முக்கியமான விடயமாகும். அப்படி இல்லாவிட்டால் சிக்கன் குனியா, டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக்கூடும். இதனை சீர் செய்வதற்கு பிரதேச சபைகள் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் அத்துடன் மாணவர்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் வாசகசாலைகள், விளையாட்டு மைதானங்கள், பொதுநோக்கு மண்டபங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற வரிப் பணத்திலேயே தான் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி எங்களின் அரசாங்கத்தில் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமக்கான சம்பளப் பணத்தினை பெறுவதில்லை எனவும் அவர்களுக்கான எரிபொருளையும் அரைவாசியாகவே பயன்படுத்துவதாகவும் தமக்கான பாதுகாப்புகளைக் கூட பெறுவதில்லை எனவும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி மகளிர் விவகார அமைச்சின் கீழ் முன்பள்ளி சிறுவர்களுக்கான போசாக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், முன்நைய அரசாங்கத்தில் ஒரு மாணவருக்கு 60 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்பொழுது ஜனாதிபதி ஒரு மாணவருக்கு 100 ரூபாய் என வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி பாடசாலை மாணவர்களுக்காக 6000 ரூபா கொடுப்பனவும், மாணவர்களின் சீருடை சப்பாத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் சிறுவர் இல்லங்கள், சிறுவர் நன்னடத்தை பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
நாட்டில் வாழ்வோருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோன்று பொருளாதாரத்திலும் சமத்துவம் பெற்றிருத்தல் வேண்டும். கொழும்பில் எவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அதே போன்று வடக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.



