செவ்வாய் கிரகத்தில் மனிதனை தரையிறக்குவோம் என்று நாசா அறிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட கூடுதல் காலம் ஆகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஏன் இவ்வளவு தாமதம்? என்ன பிரச்சனை என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.
செவ்வாய் கிரகத்தை பற்றி கடந்த 1960களிலேயே ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இன்னும் அங்கு மனிதர்களை அனுப்பாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம் பயண தூரம்தான். என்னதான் இந்த கிரககம் பூமிக்கு பக்கத்து கிரகமாக இருந்தாலும், நிஜமாகவே பக்கத்தில் கிடையாது. நமக்கும் அந்த கிரகத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 2 கோடி கி.மீ. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் காரில் ஏறி போனால் கூட அங்கு போய் சேர்வதற்கு 257 ஆண்டுகள் ஆகும். எனவே செவ்வாய் கிரகத்திற்கு போக அதிரடியான, சூப்பர் ராக்கெட் ஒன்று தேவை. ராக்கெட் இருந்தாலும் அதற்கு தேவையான எரிபொருள் தேவை.
இப்படி எல்லாவற்றையும் ரெடி செய்துக்கொண்டால் கூட செவ்வாய் கிரகத்திற்கு போக குறைந்தது 6 மாதங்கள் ஆகும். அவ்வளவு தூரத்தில் அந்த கிரகம் இருக்கிறது. சரி 6 மாதம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்திற்கு போய் ஆகிவிட்டது. அங்கு என்ன செய்வது? மனித குடியிருப்புகளை முதலில் உருவாக்க வேண்டும். ஆனால் நம்மால் அதாவது மனிதர்களால் நேரடியாக இந்த வேலையை செய்ய முடியாது. ஏனெனில் செவ்வாயில் ஆக்ஸிஜன் கிடையாது. எனவே நம்மூரில் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கி கல், மணல் கலந்து வீட்டை கட்டுவோமே, அப்படி கட்ட முடியாது.
ரோபோக்களை வைத்துதான் வீட்டை ரெடி செய்ய வேண்டும். அந்த வீடு, ஆக்சிஜன் வசதி கொண்ட வீடாக இருக்க வேண்டும். மற்றொரு விஷயம் செவ்வாய் கிரகத்தில் மணல் புயல் அடிக்கடி வீசும். எனவே அதை தாங்கும் அளவுக்கும் வீடு இருக்க வேண்டும். மிக முக்கியமானது, அந்த வீடு சூரியனின் கதிர்வீச்சுகளை தாங்கும் வகையில் இருக்க வேண்டும்.
பூமிக்கு காந்த புலன்கள் இருக்கின்றன. ஒரு காந்த துண்டை எடுத்து நூல் கட்டி தொங்க விட்டால், அதன் ஒரு முனை வடக்கை பார்த்த மாதிரியும், மற்றொரு முனை தெற்கை பார்த்த மாதிரியும் இருக்கும். இதுதான் காந்த புலன். இது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சுகளை தடுத்து நம்மை பாதுகாக்கிறது. இது இல்லையெனில் சூரிய கதிர்கள் நேரடியாக நம்மை தாக்கி நமக்கு புற்றுநோயை ஏற்படுத்திவிடும். செவ்வாயில் இந்த காந்த புலன் கிடையாது.
எனவேதான் சூரிய கதிர்களிலிருந்து நம்மை காக்கும் வகையில் வீடு அமைக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோம். சரிங்க எல்லாம் ஓகே. வீடு கட்டியாச்சு, அப்புறம் என்ன அங்கு போக வேண்டியதுதானே! இப்போதும் சிக்கல் இருக்கிறது. தண்ணீர் தான் அந்த சிக்கலுக்கு காரணம். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் பனிகட்டியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை குடிநீராக மாற்றி பயன்படுத்த நாம் புது டெக்னாலஜியை கண்டுபிடிக்க வேண்டும்.
சரிங்க எல்லாம் கண்டுபிடித்தாகிவிட்டது இப்போவாச்சும் செவ்வாய்க்கு போலாமா? என்று கேட்டால் அதிலும் சிக்கல் இருக்கிறது. அதாவது செவ்வாயில் 6 பேர் போய் தங்குகிறார்கள் எனில், அவர்களுக்கான உணவு என்ன? விவசாயம் செய்தல் என்றால் அந்த கிரகத்தின் மண் அவ்வளவு வளமானதாக இல்லை. எனவே விவசாயம் சந்தேகம்தான். சரி எல்லா காய்கறியும் இல்லை என்றாலும் கூட சில காய்கறிகளை மட்டும் பயிர் செய்து பயன்படுத்தலாம். ஆனால் எத்தணை ஆண்டுகளுக்கு அங்கேயே இருக்க முடியும்?
ஒரு அவசரத்திற்கு பூமிக்கு திரும்ப வேண்டும் என்றால் 6-9 மாதங்கள் வரை ஆகும்.
இதெல்லாம்தான் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறது.