இன்று (21) காலை 11.45 மணியளவில், வெல்லம்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட வெலேவத்த, ரம்யவீர மாவத்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், உயிரிழந்த நபர் ஒருவரை வீதிக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரிடம், அந்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு மயக்கமடைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
அதில், ஒரு நபர் முச்சக்கரவண்டியை செலுத்தி வருவதையும், மற்றொரு நபர் உயிரிழந்த நபரின் உடலை தரையில் இழுத்து விடுவதையும் காண முடிகிறது.
பிரதேசவாசிகள் 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்த பின்னர், அதிகாரிகள் அங்கு வந்த போதிலும், உயிரிழந்த நபர் என்பதால் அவர்கள் உடலை ஏற்காமல் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு வீதியில் விடப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தில் சேர்ந்த 56 வயதுடைய ஒரு நபர் என தெரியவந்துள்ளது.
இந்த நபரை இவ்வாறு வீதியில் விட்டுச் செல்ல காரணம் என்னவென்பது இதுவரை தெரியவரவில்லை.
முச்சக்கர வண்டியையும் அதன் சாரதியையும் கண்டறிய வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
