பாலி யல் துஷ் – பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியரின் அடையாளத்தைப் பாதுகாத்து பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் என்றும், மேலும் சம்பவம் குறித்த தகவல்களை வெளியிடும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“குற்றவியல் சட்டத்தின் 365 (ஏ) பிரிவின்படி, பாலி யல் குற்றங்களுக்குள்ளாகிய குழந்தைகள் மற்றும் பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது குற்றமாகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கலாம்.
இத்தகைய துயரமான சம்பவங்களை ஊடகங்கள் விவரிக்கும்போது, பாதிக்கப்பட்டவரும் அவருடைய நெருங்கியவர்களும் மேலும் மனவேதனைக்குட்படாமல் தடுப்பதற்காக ஊடக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனை மீற முடியாத ஒரு சமூகப் பொறுப்பாக ஊடகங்கள் ஏற்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தற்போது பொலிஸார் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, புலன் விசாரணைகள் தடம் புரளாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், தனது பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக ஊடகவியலாளர்களுக்கு எதிராக குறுகிய நோக்குடன் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் துறையைச் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கின்றது.
தரிந்து ஜயவர்தன கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் எச்சரிக்கின்றது.
உயர்ந்த ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்கும் எங்கள் இடையறாத போராட்டத்தை வெற்றிப்படுத்த, இத்தகைய சூழ்நிலைகளில் பொறுப்பான ஊடகப் பயன்பாடு மிகவும் முக்கியமானது. மேலும், சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கான நீதியை உறுதி செய்வதிலும் ஊடகங்கள் தலையிடும் பொறுப்பு கொண்டிருக்க வேண்டும்.
பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டு, சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களை உடனடியாகக் கைது செய்து நீதியை நிலைநாட்டுவது அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.