17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு (9) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.