எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்த நாட்டில் பெண்களுக்கு முறையான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு காணப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
நாட்டில் 52 வீதம் பெண்கள் இருந்தாலும், பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில், வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாக அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.
இதன்படி, நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர், தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.