யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
29 ශ්රී 7911 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட பேருந்தே இவ்வாறு வீதியில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளது.
பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் இவ்வாறு வீதியின் குறுக்கும் மறுக்குமாக பயணத்தில் ஈடுபட்டது. இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு….
கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்பு!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் இன்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.