இராஜாங்க அமைச்சரின் வாகன விபத்து – விசாரணைகளில் திருப்பம்!

0

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் உயிரை காவு கொண்ட விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் தொடர்புடைய இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மூன்றாவது வாகனம் ஒன்று விபத்தின்போது பயணித்ததாக கூறியதால், நெடுஞ்சாலை காவல்துறையிடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்திற்குள்ளான இராஜாங்க அமைச்சரின் வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் சாரதிகளின் கூற்றுக்களின்படி, வேகமான ஓட்டம், கவனக்குறைவு, மோசமான தெரு விளக்குகள் மற்றும் மூன்றாவது வாகனம் வழிவிடாமை என்பன, இந்த விபத்துக்கான காரணிகளாக அமைந்துள்ளன.

விபத்தின் போது இராஜாங்க அமைச்சரின ஜீப் அதிவேகமாக மணிக்கு 150km வேகத்தில் பயணித்துள்ளது.

இந்தநிலையில் விபத்துக்குள்ளான ஜீப் வாகனத்தின் ஓட்டுனர், வாகன விளக்குகளை ஒளிரச் செய்து மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டதை தான் அவதானித்ததாக பிணையில் அனுமதிக்கப்பட்ட கனரக கொள்கலன் சாரதி தெரிவித்துள்ளார்.

தமக்கு பின்னால் இரண்டு வாகனங்களும் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதை உணர்ந்த அவர், தனது வாகனத்தை இரட்டைப் பாதை அதிவேக நெடுஞ்சாலையின் இடதுபுறமாக நகர்த்தியுள்ளார்.

இதன்போது முதலில் பயணித்த வாகனம், கனரக கொள்கலனைக் கடந்து சென்றபோது, அமைச்சரின் ஜீப் கொள்கலனின் பின்பகுதியில் மோதியது.

இந்தநிலையில் விமான நிலையத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுடன் பயணித்த காவலதுறை அதிகாரி ஒருவரே, விபத்தைப் பார்த்து முதலில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அத்துடன் அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கும், அவசர சேவை வாகனங்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை அமைச்சர் சனத் நிசாந்தவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் விபத்து இடிவுகளுக்குள் இருந்து வெளியேற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.