கிளிநொச்சியில் கோரவிபத்து; வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9 எருமை மாடுகள் உயிரிழப்பு

0

கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவை அண்மித்த பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

வெளிநாடு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு குறித்த வேனில் வீடு திரும்பிய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

ஆனையிறவை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவ இடத்தில், யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் மாடுகள் கொண்டு வந்த நபா் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.