கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற நான்கு சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சீனர்களும் 30 வயது மதிக்கத்தக்க வர்த்தகர்கள் ஆவர்.
சந்தேக நபர்களான நான்கு சீன வர்த்தகர்களும் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து புறப்பட்ட தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘TG307’ என்ற விமானம் மூலம் இன்று (01) புதன்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் நாட்டை வந்தடைந்து விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள, “கிரீன் சேனல்” வழியாக எவ்வித சோதனையுமின்றி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவர்களை இடைமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளுக்குள் மிகவும் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 சிகரெட் கார்டன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு சீன வர்த்தகர்களும் தற்போது சுங்கத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பாரிய சிகரெட் கடத்தலின் பின்னணி மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து சுங்க அதிகாரிகள் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










