முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள் இன்று 30.06.2026இன்று இடம்பெற்றன.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அவரது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தின் மலசலகூட திருத்த வேலைத்திட்டங்களுக்காக 200,000ரூபாய் நிதியும், முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்திற்குரிய மின் இணைப்பை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 225,000ரூபாய் நிதியும், வற்றாப்பளை மகாவித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டடங்களுக்குரிய மின்னிணைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்காக 200,000ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மூன்று வேலைத்திட்டங்களையுமே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 30.06.2026இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
மேலும் இதன்போது குறித்த பாடசாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










