சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
ஜூன் 24 முதல் 30 வரை கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வு விஜயத்தின் நிறைவாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, இலங்கையின் பேரண்டப் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய நாடுகளை விட, இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.
அத்துடன், நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 7 ஆவது மீளாய்வு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்போது பொருளாதார வளர்ச்சியை மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற சவால்கள் இருப்பினும், சீர்திருத்தப் பாதையில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இரு தரப்பினரும் இலங்கையின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளனர்.










