அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய அதிகார சபையில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் சுரேஷ் சலேயின் மனைவி, தனது பிள்ளைகள் இருவரும் தந்தை சுரேஷ் சலேயைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நபர் இதற்கு முன்னரும் பலமுறை தங்களைப் பின்தொடர்ந்து கண்காணித்ததாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகள் வாகனத்தில் ஏறும் போது அருகில் நின்று அவர்களை படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த நபரை தாம் பல முறை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அருகிலேயே அவதானித்துள்ளதாகவும், அதனால் அவர் அந்த திணைக்களத்தின் அதிகாரியாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
“சுரேஷை (சிறைக்குள்) அடைத்து அவருக்குத் துன்புறுத்தல் தருவது போதாது என்று, தற்போது எனது பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பது முற்றிலும் அநியாயமானது” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தனது கணவரான சுரேஷ் சலேயின் உயிருக்குக் கடும் ஆபத்து இருப்பதாகத் தான் அஞ்சுவதாகவும், முழு குடும்பத்தினருக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக மின்னஞ்சல் மூலமும் தற்பொழுது நேரில் சென்றும் அளித்த முறைப்பாட்டை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் மனோரி சலே மேலும் தெரிவித்துள்ளார்.










