உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டு, வெறும் அரசியல் பழிவாங்கலாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
மொரட்டுவை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தற்போதைய விசாரணைகளின் போக்கு குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் எவ்.பி.ஐ., சர்வதேச இன்டர்போல் , ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து யார்டு பொலிஸ் ஆகிய உலகின் முன்னணி சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் தெளிவான முறையில் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலானது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை அந்தச் சர்வதேச அமைப்புகள் அனைத்தும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டிலிருந்து தப்பியோடியவரும், எல்.ரி.ரி.ஈ. மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவருமான அசாத் மௌலானா என்பவரின் போலியான வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சுரேஷ் சலேயைக் கைது செய்திருக்கின்றமை ஒரு கேலிக்கூத்தாகும். இந்தச் செயலானது எவ்.பி.ஐ. உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நடத்திய நம்பகமான விசாரணைகளை முற்றிலும் அவமதிக்கும் செயலாகவே அமையும்.
இந்த அரசியல் மயமாக்கப்பட்ட நாடகங்கள் காரணமாக, கத்தோலிக்க திருச்சபை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தத் கொடூரத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களுக்குப் பாரிய அநீதியை இழைத்து வருகின்றனர்.
நௌபர் உள்ளிட்ட 24 பிரதான சந்தேகநபர்களுக்கு எதிராக 23 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றச்சாட்டுகளுடன் கூடிய வழக்குகள் நீதிமன்றங்களில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தருணத்தில், அரசியல் இலாபங்களுக்காக விசாரணைகள் திசைதிருப்பப்படுகின்றன.
இதனால், இலங்கை அரசு மற்றும் நாட்டின் புலனாய்வுத் துறையினர் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள ஒட்டுமொத்த நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளது. இதன் விளைவாக, இனிவரும் காலங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் எந்தவொரு அத்தியாவசிய ஒத்துழைப்பும் இலங்கைக்குக் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கொழும்பு ஷங்ரிலா மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டல்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய இப்ராஹிமின் இரு மகன்கள், அவருடன் இணைந்து தற்கொலை செய்துகொண்ட அவரது கர்ப்பிணி மருமகள் மற்றும் குடும்பத்தினர் மூலமாக இந்தத் தாக்குதல்களுக்குப் பாரிய அளவில் நிதியுதவிகள் வழங்கப்பட்ட உண்மை வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான உண்மைக் குற்றவாளிகளும் பின்னணிகளும் சுதந்திரமாக இருக்கும்போது, நாட்டுக்காகச் சேவையாற்றிய சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் பழிவாங்கப்பட்டு, சிறைச்சாலைகளில் அநீதியான முறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதியின் காரணமாகவே சுரேஷ் சலே தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலேக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நிச்சயம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் கடுமையான முறையில் எடுக்கப்படும்.” – என்றார்.










