உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும், உள்நாட்டில் உடனடியாக விலையைக் குறைக்க முடியாது எனப் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது சந்தையிலுள்ள எரிபொருள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதுடன், அதன் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
“உண்மையான கணக்கீட்டின்படி ஒரு லீற்றர் எரிபொருள் 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட வேண்டும். எனினும், அரசாங்கத்தின் நிவாரணம் காரணமாகவே அதனை 400 ரூபாய்க்கு வழங்க முடிகிறது. சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே விலை குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்குவோம்” என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் முற்றாக நிராகரித்துள்ளார்.
நாட்டில் சட்டம் மட்டுமே நிலைநாட்டப்படுவதாகவும், குற்றம் செய்தவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் செய்யும்போது அதனைக் மூடிமறைக்க எதிர்க்கட்சியினர் ‘அரசியல் பழிவாங்கல்’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு வேலை செய்யத் தெரியாது என எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த பிரதமர் ,
“இவ்வளவு காலமும் ‘வேலை தெரிந்த’ நபர்கள்தானே ஆட்சியில் இருந்தார்கள்? அவர்கள் செய்த வேலை என்ன? நாட்டை வங்குரோத்தாக்கினார்கள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அந்த மாதிரியான வேலைகளைச் செய்ய எமக்குத் தெரியாது என்பது உண்மைதான்” என பதிலளித்தார்.










