முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுதலை செய்ய உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா, அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்புச் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னரே மேலதிக நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய அரச கடற்படை அக்கடமி ஆகியவற்றுடனான யோஷித ராஜபக்ஷவின் தொடர்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்று காலை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த யோஷித ராஜபக்ஷவிடம் அதிகாரிகள் நீண்ட விசாரணை நடத்தினர். அதன் பின்னர், விசாரணைகளின் அடிப்படையில் அவர் முற்பகல் வேளை கைது செய்யப்பட்டு பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.










