தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மீரிகம, கிதுல்வல இஹல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல்லேகம பகுதியில், 06 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இன்று 16ஆம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பூகொட மற்றும் கிரிந்திவெல, கொஸ்கம, பாதுகா மற்றும் கட்டுநாயக்க, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தங்கச் சங்கிலி கொள்ளைகள் மற்றும் சொத்துக் திருட்டுகளுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளில் இருந்து உருக்கப்பட்ட 09 தங்கக் கட்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டான பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










