இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த பேரிடர் காலத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளியிடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் தோட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது பட்டினியிலும் துயரத்திலும் இருந்த சில தொழிலாளர்கள் தங்களது ஆதங்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால், மக்களின் குரலைக் கேட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பில் இருந்த தோட்ட அதிகாரி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொலிஸ் முறைப்பாடுகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் இறுதியில் ஐந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோட்ட அதிகாரியின் சுயநலமும் பழிவாங்கும் மனப்பான்மை காரணமாக அப்பாவி தொழிலாளர்கள் தண்டிக்கப்படுகின்றனர் என்பதே இன்று மக்களின் வேதனையாகும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலாளர்களை அடக்க முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டே இந்த மக்களெழுச்சிக்கான காரணமாக அமைந்துள்ளது.
இதனால், கட்சி வேறுபாடின்றி, இன வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி, முழுத் தோட்ட மக்களும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குமாறு கோரி இன்று வீதியில் இறங்கி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்காதீர்கள். பாதிக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக வேலை வழங்குங்கள். அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைவோம். நீதியே எங்களின் கோரிக்கை; ஒற்றுமையே எங்களின் பலம் என பல கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஐந்து தொழிலாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல. அதிகாரத்தின் பெயரில் தொழிலாளர்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக எழுந்துள்ள மக்கள் குரலாகும்.
தொழிலாளர்களின் உரிமை காக்கப்பட வேண்டும், அநீதி தோற்க வேண்டும், நீதி வெல்ல வேண்டும். இவ்வாறான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.












