இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 144 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நடப்பு ஜூன் மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையிலான குறுகிய நாட்களுக்குள் மட்டும் சுமார் 7 ஆயிரத்து 302 டெங்கு நோயாளர்கள் புதிதாகப் பதிவாகியுள்ளனர்.
தற்போது ஆரம்பித்துள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
டெங்கு பரவலின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் 89 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ‘அதி உயர் டெங்கு அபாயம் மிக்க வலயங்களாகவும்’, 1,185 பிரிவுகள் சராசரி பாதிப்பைக் கொண்டுள்ள பகுதிகளாகவும் சுகாதாரத் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை பதிவாகியுள்ள 24 மரணங்களின் அடிப்படையில், டெங்கு மரணங்களின் வீதம் 0.06 சதவீதமாக உயர்வடைந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக,
- கொழும்பு – 8,686 நோயாளர்கள்
- கம்பஹா – 7,263 நோயாளர்கள்
- மாத்தறை – 2,986 நோயாளர்கள்
- இரத்தினபுரி – 2,874 நோயாளர்கள்
- களுத்துறை – 2,718 நோயாளர்கள்
- காலி – 2,519 நோயாளர்கள்
- கண்டி – 2,202 நோயாளர்கள்
மேற்படி மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் இந்த டெங்கு ஆபத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு, தாங்கள் வாழும் வீடு மற்றும் வேலைத்தளச் சூழலில் டெங்கு பரப்பக்கூடிய நுளம்புப் பெருக்க இடங்களை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக இல்லாதொழித்துச் சூழலைத் தூய்மையாகப் பேணுமாறு சுகாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.










