களுத்துறை – அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல்ல கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது நண்பர்கள் குழுவுடன் மொரகல்ல கடற்கரைக்கு வருகை தந்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கடலில் இறங்கி நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென எழும்பிய பலத்த அலையொன்றில் சிக்கி அவர் ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கிருந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










