மண்திட்டுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் மண்திட்டுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.
அத்துடன் கொழும்பு – ஹட்டன், ஹட்டன் – கண்டி, ஹட்டன் – நுவரெலியா பிரதான சாலையில் அதிகளவில் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மண் திட்டுகள் சரிந்து விழுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மவுசாகலை, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.
கன மழை பெய்து வருவதால் விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

