பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இரத்துச் செய்யக் கோரி, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனு நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன நீதிமன்றில் வாதிடுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கையில் எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்தும், 39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று அவ்வமைப்பில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மாவனல்ல புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் மற்றும் சஹ்ரான் ஹாஷிமின் குழுவினர் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தனவினால் 97 எச்சரிக்கை அறிக்கைகளும், 129 பேர் அடங்கிய பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. மேலும், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக 2019 ஏப்ரல் 4 ஆம் திகதியே இந்தியப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்திருந்தது.
எனினும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளனர்.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாக எந்தவொரு விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் கண்டறியப்படவில்லை. மாறாக, தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜயகீ த அல்விஸ் குழு பரிந்துரைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சிப் பதிவுகளுக்காக மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.










