உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளையும் இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளும் புனரமைப்பதற்கான நிதி உதவிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.
புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கான, புனரமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.
முட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சரின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் பீதாம்பரம் வாலசஸ்ரீதரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆலயங்களை சுத்தம் செய்வதற்காக 25000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டதுடன் புனரமைப்பு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாய் 13ஆலயங்களுக்கும் ஒரு ஆலயத்திற்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
இந்த நாட்டிலே போதை கலாச்சாரம் என்பது உருவாகிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, அரசாங்க ரீதியிலே நாங்கள் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து விதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற அதே வேளையிலே, பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை மீட்டெடுப்பதற்காக அவர்களுக்கான புனர்வாழ்வு வழங்குவதற்கான விடயங்களையும் நாங்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.
உங்களுக்குத் தெரியும் இந்த போதை, ஆக மோசமானது. இந்த போதை பாதிப்பிலிருந்து இளைஞர், யுவதிகளை மீட்டு விடுவதற்காக இந்த மதஸ்தானங்களின் ஊடாக, உங்களது ஒத்தழைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
அதனைப் போன்று இன்று கொழும்பில் கூடுதலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலே அன்று பாதிக்கப்பட்ட தரப்பினருடன் அந்தத் தாக்குதலிலே சம்பந்தப்பட்ட தரப்பினர்களை இனங்காண்பதற்காக விசாரணைகள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையிலே, அந்த விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற இந்த நேரத்திலே எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், விசேடமாக ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்று அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளை இப்போது முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.
கடந்த காலங்களிலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என பலவிதமாக கோரிக்கை முன்வைத்தவர்கள், இந்த ஆட்சியாளர்கள் விசாரணைகளை முன்வைக்க மாட்டார்கள், விசாரணை செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிட்டவர்கள், இன்று அந்த விசாரணையை குழப்புகின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் இப்போது குறிப்பிடுகின்றார்கள் நாங்கள் இந்த விசாரணையை முன்னெடுத்திருப்போம், எங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கின்ற இந்த வேளையிலே இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் நாங்கள் சரியாக விசாரணை செய்து உரியவர்களுக்கு எதிராக தண்டனைகளை வழங்கியிருப்போம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் இன்று அதை குழப்புகின்ற ஒரு செயல்பாடுகளையே அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.
எதுவாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக இந்த உயிர் நீத்தவர்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தாங்கள் எதற்காக உயிர் நீத்தோம், ஏன் எங்களுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றது என்பது கூட அறியாத ஒரு நிலைமை இன்று இருக்கின்றது.
அந்த நீதிக்காக எப்போதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றிணைந்து நிற்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்பொழுதுமே நீதிக்கும் நேர்மைக்காகவும் மக்கள் நேயத்திற்காகவும் செயல்படுகின்ற ஒரு அரசாங்கமாக தொடர்ச்சியாக இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த விசாரணையின் போது பலவிதமான தரப்பினருக்கு நாங்கள் விசாரணையை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம். சில பேர் அரச சாட்சியாக மாறியிருக்கின்றார்கள். ஒரு சிலர் இன்னும் தொடர்ந்து விசாரணைக்காக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். நான் நினைக்கின்றேன் அந்த விசாரணை மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. மிக நீண்ட காலமாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த விசாரணை நேர்மையாகவும் நீதியாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் குறிப்பிட்டிருந்தார்கள் நாங்கள் இதிலே எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, நாங்கள் உண்மையான நீதியானவர்களைத் தேடுவோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இன்று அவர்களே அதற்கு எதிராக விசாரணையை குழப்பும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சிறைச்சாலைகளைப் பொறுத்தவரைக்கும் சிறைச்சாலைகளிலே சகலவிதமான வசதிகள், அடிப்படை வசதிகள் அந்த கைதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. சிறைச்சாலைகளிலே தேவையான அடிப்படை வசதிகள் உட்பட ஏனைய வசதிகள், சுகாதார வசதிகள் உட்பட அவர்களுக்கான மருத்துவ வசதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
உங்களுக்குத் தெரியும் ஒரு கைதி சுகயீனமுற்றிருந்தால் நேரடியாக உள்ளே இருக்கின்ற வைத்தியசாலையைப் பயன்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகின்ற அதே நேரம், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அரசு வைத்தியசாலைகளுக்குச் சென்று அவர்களுக்கு சிகிச்சை வழங்குகின்ற ஒரு செயல்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது.
சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் அங்கே இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. உங்களுக்குத் தெரியும் பல போதை குற்றச்சாட்டுகளோடு சம்பந்தப்பட்டவர்கள் கூட இன்று சிறைச்சாலைகளிலே தான் இருக்கின்றார்கள்.
அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது. அனைவருக்கும் வழங்கப்படுகின்ற அதே வசதிகள் தான் அவர்களுக்கும் வழங்கப்படும். ஆகவே அவர்கள் எதிர்பார்க்கின்ற கடந்த கால அரசாங்கம் கொடுத்த வசதிகளை இந்த அரசாங்கத்தில் அவர்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை அவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். சிறைச்சாலைகளில் சரியான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
















