புத்தளம் மாவட்டம், ஆனமடுவ – முதலக்குலிய பகுதியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய போனேன் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சிறிய ரக லொறி ஒன்றில் வழிபாட்டுக்காக வந்த குழுவினரே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர். வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் லொறியில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியுள்ளார். விபத்து நடந்த தருணத்தில் லொறியில் மொத்தம் 13 பேர் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தால் காயமடைந்த 13 பேரும் உடனடியாக ஆனமடுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மேற்படி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த ஏனைய 12 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் ஆனமடுவ வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லொறி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










