நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட காட்மோர் பிரதான சாலை யானது போக்குவரத்துக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது .
இதன் காரணமாக தங்கள் அன்றாட பணிகளை உரிய நேரத்தில் செய்து கொள்ளமுடியாதுள்ளதாக அப் பகுதியில் உள்ள மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர் .
குறித்த சாலையில் நான்கு தனியார் பேருந்துகள் அரச பேருந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் போன்றவை தினமும் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான பெருந்தோட்ட மக்கள் பாடசாலை மாணவர்கள் அரச துறையினர் மற்றும் காட்மோர் பகுதியில் உள்ள எழில் மிகுந்த நீர் வீழ்ச்சியை பார்க்க வரும் உல் நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் குறித்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காட்மோர் நீர் வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறை யினர் தினமும் வந்து செல்கின்றனர் மத்திய மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் உள்ள இந்த பாதையை சீர் செய்யும் நோக்கில் கடந்த 2018 ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு மல்லியப்பு சந்தியில் இருந்து காட் மோர் சந்தி வரை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால் குறித்த வேலைத்திட்டம் முழுமை பெறாத நிலையில் மொக்கா தோட்ட பிரதான காரியாலயம் வரை செப்பனிட்டு இடைப்பட்ட சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2025 ஜூலை மாதம் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூலமாக இந்த பாதையை கார்பெட் பாதையாக செப்பனிடும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது .
குறித்த சாலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பிட்ட 2 கிலோ மீட்டர் தூரம் செப்பனிட்ட போதும் எஞ்சிய பகுதிகள் இன்னும் பாரிய குன்றும் குழியுமாக உள்ளது.
இன்று வரை முழுமை பெறாத நிலையில் குறித்த சாலையின் அவல நிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கர்ப்பிணிகள் வாகன சாரதிகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
எனவே குறித்த விடயம் சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்










