WASPAR திட்டத்தின் சார்பில் YWP – இளம் நீர்வாண்மையாளர் வடக்கு வட்டத்தினர் நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
நயினாதீவின் நன்னீர்வளம் பற்றிய முதற்கட்ட பார்வையிடலை நோக்கமாகக் கொண்டு இக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் பேராசிரியருமான நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் நீரியல் ஆய்வினைப் பயிலும் துறைமையாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீர்வள மாணவர்களும் இதனை இணைந்து முன்னெடுத்தனர்.
நயினாதீவில் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அமைவிடம், பரம்பல், பயன்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் நேரடியாக பார்வையிடப்பட்டது.
தண்ணீரின் தரம், உப்புச் செறிவு, உவர்நீராதல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து கண்டறிந்ததோடு அங்குவாழ்ந்து வரும் மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
முதல்நாளன்று பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கான நீர் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, இரண்டாம் நாளில் குளங்கள், கிணறுகளில் உள்ள தண்ணீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.
வீதியோரங்களிலும், ஊர் முனைகள், ஆலயச் சூழல், பள்ளிவாசல், கடற்கரை போன்ற மக்கள் சேரும் இடங்களிலும் கிராம மக்களுடன் உரையாட கிடைத்த வாய்ப்புக்களை அணியினர் நீர்சார்ந்த உரையாடல் களமாக மாற்றியமைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மீனவர்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பும், களஆய்வும் இடம்பெற்றது.
இறுதி நாளன்று காலையும் கள ஆய்வில் ஈடுபட்ட அணியினர் தாங்கள் கண்டறிந்த விடயங்களை நயினாதீவு மக்களிடையே வெளிப்படுத்தும் நோக்குடன் அன்று மதியம் நியாப் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான பலங்கள், குறைபாடுகள், எதிர்கால அச்சுறுத்தல்கள், கள ஆய்வின் போதான மக்களின் நீர் தொடர்பிலான உரையாடல்களில் வெளிப்பட்ட முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அத்தோடு, கள ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
குறித்த பயணம் தொடர்பில் இவ்வாரம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற உள்ள வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டத்தின் வாராந்த இணைய வழி உரையாடல் நிகழ்வில் பங்கேற்று மேலும் பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.













