பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலிலிருந்த கைதியொருவர் உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் வவுணதீவு பொலிஸ் குழுவொன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குவந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது,
குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நபரின் மனைவி கரடியானாறு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் வீட்டிற்குச் சென்று அவரைக் கைதுசெய்திருந்தனர்.
இது தொடர்பிலான விசாரணைக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சற்றுநேரத்தில் அந்நபர் மயக்க நிலையடைந்ததாகவும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவேளை மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரது சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இவரது தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.














