அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் ‘அழகான கடற்கரை’ என்ற செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக ‘அழகான கடற்கரை’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் இவை முன்னெடுக்கப்பட்டன.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் இத் திட்டம் இலங்கை இராணுவத்தின் 18வது விஜயபாகு காலாட்படையணி ஏற்பாட்டில் இன்று காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.
“கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் பிரதேச பொது அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள். இளைஞர் கழகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் வாகனங்களும் கனரக இயந்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா, 18வது விஜயபாகு காலாற்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் அமைப்பினரும் இதில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்















