முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செட்டிகுளம் பிரதேசக்கிளையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக, செட்டிகுளம் அந்தோனியார் ஆலயத்தின் பங்கு தந்தையும், செட்டிகுளம் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு வண. ராஜீ சர்மா ஐயாவும் தீபச் சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், வவுனியா மாவட்ட கட்சியின் துணைத் தலைவருமான பாலச்சந்திரன் சிந்துஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் பத்மசீலன் ஜெகன், மற்றும் செட்டிகுளம் பிரதேசத்திற்கு பல கல்வித் திட்டங்களை முன்னின்று செய்துவரும் சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன் அவர்களும் அவரது பாரியாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செட்டிகுளம் பிரதேச மக்கள், உறவுகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் திரண்டு, 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் உணவின்றி, நீரின்றி, மருந்தின்றி மடிந்த உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
இறுதியில் கலந்துகொண்ட அனைவரும் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தினர். “மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்” என்ற முழக்கம் நிகழ்விடம் முழுவதும் எதிரொலித்தது. மக்கள் அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.










